நாட்டின் மருத்துவ கல்வியின் தரம் குறைந்து வருகிறது: பிரதமர் மன்மோகன்சிங் கவலை
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையையும் திறந்து வைத்தும் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
மருத்துவ கல்வியின் தரம் குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இதனை தொடர்ந்து அனுமதிக்க கூடாது. மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பாட திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும. மருத்துவ மாணவர்களும் கிராமப்புறங்களில் மனமுகந்து பணியாற்ற முன்வரவேண்டும். மருத்துவ கல்வியை மேம்படுத்துவதற்காக மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியையும், சமுதாய கல்வியையும் அளிக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்.பி.பி.எஸ். பாட திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சிலும் மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் சுகாதார சேவைகள் கிடைக்காத இடங்களில் மருத்துவ கல்லூரியை தொடங்க அனுமதி வழங்கி உள்ளோம்.
நமது நாட்டின் சுகாதார நிலைமைகள் மிக மோசமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சுகாதார நிலையை மேம்படுத்த முடிந்தது. இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கிறோம். இதைபோல் நகர்புற மக்கள் பயன்பெறுவதற்கும் சுகாதார திட்டத்தை தொடங்க உள்ளோம்.
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைதான் உள்ளது. இதைபோல ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் 2 மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையே தற்போது உள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை இடங்களையும் அதிகரித்துள்ளோம். சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் போபால், ஜோத்பூர், ராய்ப்பூர், பாட்னா, ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.