விஐபிக்களின் பாதுகாப்புக்காக 900 கமாண்டோ வீரர்களுக்கு தீவிரவாத தடுப்பு பயிற்சி
டெல்லி: மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் 900 கமாண்டோ வீரர்களை திரும்பப் பெற்று அவர்கள் அனைவருக்கும் தீவிரவாத தடுப்பு பயிற்சி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு படை(என்.எஸ்.ஜி) கறுப்பு பூனைப்படை, எஸ்.ஏ.ஜி, எஸ்.ஆர்.ஜி உள்பட 5 பிரிவுகளில் கமாண்டோ படைகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் உள்ள பாதுகாப்பு படையினர் முக்கிய மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு படை தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுபாஷ் ஜோஷி தேசிய பாதுகாப்பு படையினரின் பணிகளை மாற்றி அமைக்க முடிவு எடுத்து உள்ளார். இதனால் முக்கிய மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை பாதுகாப்பு பணியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 900 பேரை உடனடியாக திரும்ப அழைக்க திட்டம் வகுத்து உள்ளார். அவ்வாறு திரும்பப்பெறும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாத தடுப்பு பணிகள், விமான கடத்தல் தடுப்பு படைக்கும், வான்வெளி பாதுகாப்பு பயிற்சியிலும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.