பிரணாப் முகர்ஜியுடன் குற்றவாளி எம்.எல்.ஏக்கள் விருந்து: சர்ச்சையில் அகிலேஷ்
லக்னோ: பிரணாப் முகர்ஜிக்கு விருந்தளித்த உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 2 எம்எல்ஏக்களை விருந்துக்கு அழைத்து வந்ததால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு கோரி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரிடம் ஆதரவு கோரி உத்தரபிரதேசம் சென்றுள்ள அவருக்கு அங்கு சிறப்பான விருந்தளிக்கப்பட்டது. இந்த விருந்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முக்தார் அன்சாரி, விஜய் மிஸ்ரா ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகள் காரணமாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ. சட்டப்பேரவைக் கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்ள அனுமதி உண்டு. ஆனால் நேற்று சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும் சிறைக்கு செல்லாமல் பிரணாபுக்கு அகிலேஷ் யாதவ் வைத்த விருந்தில் கலந்து கொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்று 100 நாட்களைக் கடந்துவிட்ட அகிலேஷ் யாதவ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மக்களின் வரிப்பணத்தில் எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்கித் தருவேன் என்று அறிவித்த அகிலேஷ் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த அறிவிப்பினை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.