மணல் கடத்தல் விவகாரம்: பாளை தாலுகா இன்ஸ்பெடக்டர் அதிரடி மாற்றம்
நெல்லை: மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. பாளை, சீவலப்பேரி, பாலமடை, திருமலை கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், சுத்தமல்லி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காவல் துறை மற்றும வருவாய் துறையினரின் கண்காணிப்பையும் மீறி இந்த கடத்தல் சம்பவம் நடக்கிறது. ஒரு சில பகுதிகளில் போலீசார் மாமூல் வாங்கிக் கொண்டு மணல் லாரிகளை விட்டுவிடுவதாகக் கூறப்படுகிறது. அசுர வேகத்தில் செல்லும் இந்த லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சீவலப்பேரி, மணப்படை வீடு பகுதியில் மணல் அள்ளும் லாரிகள் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாந்தி நகர் வழியாக நான்கு வழிச்சாலையில் செல்கின்றன. கடந்த சில தினஙகளுக்கு முன் மணல் கடத்தி வந்த லாரியை தாலுகா போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி டிரைவரை கைது செய்ததுடன் அதன் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
முக்கிய புள்ளிகளின் லாரியை போலீசார் கண்டு கொள்வதில்லை எனவும், மாமூல் கொடுக்காத லாரிகளை மட்டுமே பிடிப்பதாகவும் கூறி புதிய தமிழகம் கட்சி சார்பில் பாளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தாலுகா இன்ஸ்பெக்டர் அருள் அதிரடியாக மாற்றப்பட்டார்.