ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து மனித தவறுகளே காரணம்: நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தானது மனித தவறுகளால்தான் நிகழ்ந்ததுதான் என்றும் உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமிப் பேரழிவு ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணு உலையும் தப்பவில்லை. இதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் அணு உலைகள் படிப்படியாக மூடப்பட்டன. கடந்த 2 மாதங்களாக அணுமின் உற்பத்தியின்றியே ஜப்பான் இயங்கி வந்தது. இந்நிலையில் புகுஷிமா அணு உலை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே ஜப்பான் நாட்டு நாடாளுமன்றத்தின் விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்தினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1167 பேரை நேரில் சந்தித்து 900 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர் புகுஷிமா அணு உலையையும் பார்வையிட்டது. அதன் அருகில் உள்ள மேலும் 2 அணு உலைகளையும் விசாரணைக் குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த அறிக்கையில் முழுவதும் மனித தவறுகளால்தான் புகுஷிமா அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அணு உலையில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டால் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டியது அணு உலை நிர்வாகத்தின் பொறுப்பு. அப்படிச் செயல்பட்டிருந்தால் அணு உலை வெடிப்பைத் தவிர்த்திருக்க முடியும். ஆகையால் புகுஷிமா அணு உலை வெடிப்பானது மனித தவறுகளால் ஏற்பட்டதேயன்றி இயற்கைப் பேரிடர் அல்ல என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.