ஸ்பெக்ட்ரம் ஏலம்: அமைச்சர்கள் குழுவுக்கு தலைவர் ப.சிதம்பரம்!
டெல்லி: தொலைத் தொடர்பு துறை தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகிவிட்டதையடுத்து அந்தப் பதவியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவுக்கு நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தலைவராக இருந்தார். அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாருக்கு அந்தப் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் அளித்தனர். ஆனால் அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து புதிய தலைவராக ப.சிதம்பரம் பொறுப்பேற்க உள்ளார். இந்தக் குழுவில் 7 பேர் உறுப்பினர்களா இடம் பெறுவர். ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுறைகளை மட்டும் இந்தக் குழு கவனிக்கும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விலை குறித்து இறுதி முடிவை அமைச்சரவை தான் எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் சிதம்பரத்தின் பெயரையும் சுப்பிரமணிய சாமி மற்றும் பாஜக ஆகியவை இழுத்துவிட்டு வரும் நிலையில் இந்தப் பதவியில்
பவாருக்குப் பதிலாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந் நிலையில் சிதம்பரத்திடமே அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.