பத்மநாபசாமி கோவில் 'ஏ' அறையில் 10 லட்சம் கோடி பொக்கிஷம்...மதிப்பிட ஒரு வருஷமாகுமாம்!
இந்தியாவின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில். இந்தக் கோவிலின் மூலஸ்தானத்துக்குக் கீழே 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் பெருமளவில் பொக்கிஷம் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து ஆறு அறைகளையும் திறந்து உள்ளே என்ன உள்ளது என்று ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த அறைகளைத் திறக்கும் நடவடிக்கை தொடங்கியது. ஒவ்வொரு அறைக்கும் ஏ,பி,சி,டி,இ, எப் என பெயரிடப்பட்டது. இந்த அறைகளில் எதிர்பாராத அளவுக்கு நகைப் பொக்கிஷம் மலை போல குவிந்துள்ளது. இவற்றை தற்போது மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இவற்றின் இன்றைய மதிப்பு பல லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.
பொக்கிஷ மதிப்பீட்டுக்காக உச்சநீதிமன்றமே ஒரு குழுவையும் அமைத்தது. கடந்த ஜூலை மாதம் இந்த மதிப்பீட்டுப் பணி தொடங்கியது. மிகவும் பழமையான நகைக் குவியல் என்பதால் அவற்றின் உண்மையான மதிப்பை இப்போதுள்ள முறைப்படி கணக்கிட முடியாது. எனவே நவீன கருவிகளைக் கொண்டு அதைக் கணிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக வெளிநாடுகளிலிருந்து மதிப்பீட்டுக் கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அறையிலும் உள்ள நகைகளை மதிப்பீடு செய்து வந்த நிலையில்,
நேற்று ஏ அறையில் உள்ள நகைக் குவியலை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. இந்த அறையானது, பத்மநாபசாமியின் கருவறைக்கு வெளியே பூமிக்கு அடியில் உள்ளது. மிகவும் நுட்பமான முறையில் இந்த ரகசிய அறை அமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் யாராவது இறங்கினால், அவர்களாக வெளியே வரமுடியாது. காரணம், உள்ளே படிக்கட்டுக்கள் எதுவும் இல்லை. சுரங்கப் பாதை போல செல்கிறது. எனவே யாராவது வெளியே இருந்து உதவி செய்தால்தான் உள்ளே போனவர்கள் மீண்டும் வெளியே வர முடியும்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறை திறக்கப்படவில்லை. எனவே விஷ வாயு நிரம்பியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இதையடுத்து முதலில் ஆக்சிஜன் உள்ளே செலுத்தப்பட்டது. உள்ளே விஷ வாயு இல்லை என்று தெரிய வந்த பின்னரே தீயணைப்புப் படை வீரர்களை உள்ளே இறக்கி அனுப்பினற்.
அங்கு வைர, தங்க நகைகள் குவியல் குவியலாக இருந்ததைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனராம். 300 தங்குக் குடங்கள் குவிந்து கிடந்தன. அதேபோல ஆயிரககணக்கான வைர நகைகளும் குவியல் குவியலாக கிடந்துள்ளன. இவற்றை பத்திரமாக மதிப்பீட்டு அறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்தப் பணிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு அறையில் உள்ள நகைகளை முழுமையாக மதிப்பிடவே ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள். இருப்பதிலேயே இந்த அறையில்தான் மிகப் பெரிய அளவில் நகைக் குவியல் இருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள பொக்கிஷத்தின் மதிப்பு மட்டும் ரூ. 10 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் பி அறை மட்டும் திறக்கப்படவில்லை. அதையும் திறந்து பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும்போது மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.