கோவா முதல்வரை 5வது முறையாக கேட்டில் தடுத்து நிறுத்திய ஹோட்டல் பாதுகாவலர்
கோவா முதல்வராக மனோகர் பாரிகர் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற காலத்தில் இருந்து எங்கு சென்றாலும் ஒரேயொரு பாதுகாவலரை மட்டுமே அழைத்துச் செல்வார். எளிமைக்கு பெயர் போன பாரிகர் கடந்த புதன்கிழமை பனாஜியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.
சிவப்பு சைரன் உள்ள காரில் சென்ற பாரிகரை ஹோட்டல் நுழைவாயிலில் இருந்த பாதுகாவாலர் சோதனை செய்வதற்காக அவரது காரை தடுத்து நிறுத்தினார். உடனே பாரிகர் காரில் இருந்து இறங்கி வந்து தனது பாதுகாவலரிடம் ஹோட்டல் பாதுகாவலரிடம் போய் தான் தான் கோவாவின் முதல்வர் என்று கூறிமாறு சொல்லி அனுப்பினார். அந்த ஹோட்டல் பாதுகாவலர் பாரிகரை தடுத்து நிறுத்தியது இது 5வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாரிகர் கூறுகையில்,
நான் முதல்வர் ஆனதில் இருந்து இந்த பாதுகாவலர் என்னை 5வது முறையாக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தியுள்ளார். இம்முறை நிறுத்தியபோது எனது பாதுகாவலரை விட்டு நான் தான் கோவாவின் முதல்வர் என்று அந்த பாதுகாவலரிடம் சொல்லுமாறு அனுப்பினேன். அது சரி நான் முதல்வர் என்பது குர்காவுக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை தான் என்றார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹோட்டல் உரிமையாளரின் மகன் அம்பர் டிம்பலோ இது குறித்து எதுவும் கூறவில்லை. 26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு ஹோட்டல்களுக்கு எந்த கார் வந்தாலும் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.