சர்வதேச பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகும்: ஐ.எம்.எப். தலைவர் எச்சரிக்கை
டோக்கியோ: ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சர்வதேச அளவிலான பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் எச்சரித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், போர்ச்சுக்கல், இத்தாலி ஆகியவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்துக்கு கால வரையறையுடன் கூடிய தீர்வு விரைவாக காணப்பட வேண்டும். அப்படித் தீர்வு காணப்படாத நிலையில் உலக நாடுகளில் சர்வதேச அளவில் இதன் தாக்கம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில் உறுதியான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்தாக வேண்டும். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமடையும். பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை தவிர்க்க முடியும் என்றார் அவர்.
நடப்பாண்டில் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் ஐ.எம்.எப் கணித்தது. 2013-ல் இதனை 4.1 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் கூடிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதென முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான நடவடிக்கைகளை அந்நாடுகளின் மத்திய வங்கி வியாழக்கிழமை முதல் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. இவை வளர்ச்சியின் அடையாளம்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த பலனை அளிக்கும். ஆனால் ஐஎம்எப் பார்வையில் இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதாது. ஐரோப்பிய மண்டலம் முழுவதும் நிதி சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இங்குள்ள வங்கிகளின் செயல்பாடு முற்றிலுமாக மாறி, நிதிப் பற்றாக்குறை இல்லாத சூழல் உருவாக வேண்டும் என்றார் அவர்.