மெட்ரோ ரயிலில் சுற்றுலா போன பிரதீபா பாட்டீல்!
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் வளர்ச்சியின் பெருமைக்குரிய அடையாளம் மெட்ரோ ரயில் என்று டெல்லி மெட்ரோவுக்குப் பின்னர் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர்.
77 வயதான பிரதீபா பாட்டீல், இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விடைபெறவுள்ளார். இந்த நிலையில், அவர் இன்று மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். இதற்காக 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. உத்யோக்பவன் நிலையத்திலிருந்து கிளம்பி சுல்தான்பூர் வரை இந்த ரயில் சென்றது. தனது பெய்ட் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்துப் பயணமானார் குடியரசுத் தலைவர்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சுதிர் கிருஷ்ணா, டெல்லி மெட்ரோ தலைவர் மங்கு சிங் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவருடன் பயணித்தனர்.
பிரதமர் உள்ளிட்டோர் இந்த ரயிலில் ஏற்கனவே பயணம் செய்துள்ளனர். ஆனால் ஒரு குடியரசுத் தலைவர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே சுகோய் போர்விமானத்தில் பறந்து, அதில் பயணித்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பிரதீபா பாட்டீல் வைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.