மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை குறைக்கக் கோரி முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்
இது குறித்து தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருளப்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 15க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மெரிட் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டு வரை ரூ.85,000 கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் தனியார் கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று கல்வி கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர, கிராமப்புற மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் இதில் தலையிட்டு கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பல் மருத்துவ மாணவர்கள் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.