கோ-ஆப்டெக்ஸின் பழைய பட்டுப்புடவைக்கு புதிய பட்டுப்புடவை திட்டம்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பழைய பட்டுப்புடவையை கொடுத்துவிட்டு புதிய பட்டுப்புடவை வாங்கும் பழசுக்குப் புதுசு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் நேற்று நடந்தது. கைத்தறி, கதர்துறை அரசு செயலாளர் கோ.சந்தானம் தலைமையில் நடந்த விழாவுக்கு கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) வெ.பழனிகுமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் கலந்து கொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் குத்துவிளக்கை ஏற்றி வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,
நாட்டில் 203 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. பழசுக்குப் புதுசு திட்டத்தின்கீழ் மக்கள் பழைய பட்டுப்புடவையை கொடுத்துவிட்டு புதிய பட்டுப்புடவையை வாங்கலாம். புதிய பட்டுப்புடவையின் மதிப்பின் அடிப்படையில் பழைய புடவை மதிப்பிடப்படும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 பட்டுப்புடவை வாங்கினால் ஒன்று இலவசம் திட்டதின்கீழ் ரூ.35 கோடிக்கு பட்டுப்புடவைகள் விற்பனையானது.
நெசவாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், நலிந்த சங்கங்கள் புத்துணர்ச்சி பெறவும் கூலி சதவீதம் 14ல் இருந்து 20க உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.