குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிப்பது குற்றம்: தேர்தல் ஆணையம்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் யார்க்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது குற்றம் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறி எம்.பி.,எம்.எல்.ஏ.க்களுக்கு அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்கக் கூடாது.
குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிப்பதோ அல்லது வேறு வகையில் உத்தரவிடுவதோ குற்றமாகக் கருதப்படும்.
கட்சியின் முடிவுக்கு மாற்றாக வாக்களித்தார் என்று கூறி எவரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியாது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பப்படி வாக்களிக்க முடியும். அதே போல இத்தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
அதேபோல அரசியல் கட்சிகள் எந்த வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்ய முடியும். எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களிடமும் தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ள முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.