கோவை பள்ளி சிறுமியை கடத்தி விற்க முயன்ற 2 பேர் கேரளாவில் கைது
கோவை: கோவையை சேர்ந்த பள்ளி சிறுமியை கடத்திய 2 பேர், கேரளாவில் போலீசாரிடம் சிக்கினர். கடத்திய நபர்கள், சிறுமியை ரூ.2 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கோவை மாவட்டம், சாய்பாபா காலனியை அடுத்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(33). இவருக்கு ராணி என்ற மனைவியும், கார்த்திகாயினி(6) என்ற மகளும் உள்ளனர். கார்த்திகாயினி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி கார்த்திகாயினிக்கு வழக்கம் போல பள்ளி சீருடை அணிவித்த ராணி, பள்ளிக்கு கொண்டு போய்விட்டு வந்தார். ஆனால் மாலையில் பள்ளி முடிந்து நெடுநேரமாகியும், சிறுமி வீடு திரும்பவில்லை. இது குறித்து பள்ளியில் விசாரித்த போது, சிறுமி ஏற்கனவே வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினர்.
கார்த்திகாயினியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து ஆனந்தன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். பள்ளியில் இருந்து சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இரவு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநானை தொடர்பு கொண்ட பாலக்காடு ரயில்வே போலீசார், பள்ளி சீருடையில் உள்ள ஒரு சிறுமியுடன் 2 வாலிபர்கள் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனிப்படை போலீசார், பாலக்காடு ரயில் நிலையத்திற்கு சென்று சிறுமியை மீட்டு, 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் சாய்பாபா காலனியில் காணாமல் போன கார்த்திகாயினி தான் அந்த சிறுமி என்பது தெரிந்தது. இதனையடுத்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கன்னிவாடியை சேர்ந்த செல்வம்(32), சுப்ரமணி(30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த 9ம் தேதி மாலையில் சாய்பாபா காலனியில் உள்ள பள்ளியின் முன்பு நின்ற கார்த்திகாயினியை கடத்தி சென்றதாக ஒப்புக் கொண்டனர். பள்ளியின் முன் நின்று அழுது கொண்டிருந்த கார்த்திகாயினிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி 2 பேரும் சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பாலக்காட்டிற்கு கொண்டு சென்ற போது, சிறுமி தனக்கு பசிப்பதாக கூறி அழுதுள்ளார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் சிறுமி தொடர்ந்து தனது அம்மாவை பார்க்க வேண்டும் அழுதுள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த கடைக்காரர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் நடைபெற்ற தொடர் விசாரணையின் மூலம், கோவையில் இருந்து கடத்தப்பட்ட கார்த்திகாயினியை ரூ.2 லட்சத்திற்கு விற்க ஏஜென்டை பார்ப்பதற்காகவே, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுமி கார்த்திகாயினியை பெற்றோரிடம் ஒப்படைந்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவருக்கும், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா, இதுவரை எத்தனை பேரை இவர்கள் கடத்தி உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.