கத்திப் பாடம் நடத்துவதால் ஆசிரியைகளுக்கு சீக்கிரமே குரல் கெட்டுப் போகும் அபாயம்!
இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள தேசிய குரல் மற்றும் பேச்சுக்கான மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களை விட ஆசிரியைகளுக்கே அதிக அளவில் குரல், தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் பேசுவதை விட பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகள் அதிக சப்தத்துடன் பேச வேண்டியுள்ளது. குறிப்பாக பாடம் நடத்தும்போது கத்திப் பாடம் நடத்துவது ஆசிரியைகள்தான். காரணம், மாணவர்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களது குரல் சரியாக கேட்க வேண்டும் என்பதற்காகவும் அதிக சப்தம் போட்டு பாடம் நடத்துகிறார்கள் ஆசிரியைகள்.
ஆண் ஆசிரியர்களை விட 10 சதவீதம் அதிக அளவில் பெண் ஆசிரியைகள் சத்தம் போட்டு பாடம் நடத்துகிறார்களாம். அதேபோல வீட்டில் இருக்கும் போது பேசுவதை விட 7 சதவீதம் அதிக அளவில் சப்தம் போட்டுப் பேசுகிறார்களாம். மேலும், ஆண் ஆசிரியர்களை விட பெண்கள்தான் அதிக அளவில் உரக்கப் பாடம் நடத்துகிறார்களாம்.
இதன் காரணமாக ஆசிரியைகளுக்கு குரல் பாதிப்பு, குரல் கரடு முரடாக மாறுதல், குரல்வளையில் பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்டவை அதிகம் வருகிறதாம்.
பெண்களின் குரல் ஆண்களை விட சற்று மெல்லியதாக இருப்பதால் சத்தம் போட்டு பாடம் நடத்தினால்தான் வகுப்பறையில் அனைவருக்கும் தெளிவாக கேட்கும் என்று ஆசிரியைகள் கருதுகின்றனர். இதனால்தான் அவர்கள் மற்றவர்களை விட கத்தி பாடம் நடத்துகிறார்கள்.
ஆசிரியைகளுக்கு இதுபோன்ற தொண்டைப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க வகுப்பறைகளில் மைக் வைத்து அதன் மூலம் அவர்கள் பாடம் நடத்தினால் பெருமளவில் பிரச்சினையைக் குறைக்க முடியும் என்று இந்த மையம் கூறுகிறது.