கோவை மணல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
கோவை: திருப்பூரில் மணல் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிப்பதைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளர்கள் பொதுப் பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கேட்டுக் கொண்டதை அடுத்து தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காங்கயம், வெள்ளகோவில் ரோட்டில் அதிகப் பாரம் ஏற்றி வந்த 117 மணல் லாரிகளையும், பனப்பாளையம் சோதனைச்சாவடியில் 20 லாரிகளையும், தாராபுரம் பகுதியில் 13 லாரிகளையும், உடுமலை பகுதியில் 3 லாரிகளையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
மோட்டார் வாகன சட்டப்படி ஓவர் லோடுக்கு ரூ.2,000 மற்றும் லாரியில் கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு யூனிட் மணலுக்கும் ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு லாரிக்கும் சராசரியாக ரூ.8,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. 10 வீல் கொண்ட பெரிய அளவிலான டாரஸ் லாரிக்கு ரூ.21,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்ற சட்டமீறலில் ஈடுபட்ட மணல் லாரிகள் மூலம் காங்கயம் போலீசார் ரூ.12 லட்சத்து 21,211ம், பல்லடம் போலீசார் ரூ.2.14 லட்சமும் அபராதமாக வசூலித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்குக் கோவை மணல் லாரி உரிமையளர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போலீசாரை கண்டித்து கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போரட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டைச் சேர்ந்த 4,000 லாரிகள் பங்கேற்றன. இந்நிலையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும், எனவே உடனே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து கோவை மண்டல மணல் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.