சென்னையில் அதிகாலையில் ஜில்லென்று கன மழை... மக்கள் மகிழ்ச்சி
சென்னை: சென்னை நகரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கன மழையும், லேசான தொடர் மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக்காலம், மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டியுள்ள பகுதிகளில் நிலவி வருகிறது. இருப்பினும் மழை பெரிதாக இல்லை. இயல்பான அளவில் மழை இல்லை, சுத்தமாக சீசனே சரியில்லை என்றும் கூறலாம். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு மொத்தமாக தமிழகத்தில் 32 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை சிங்கிள் டிஜிட்டிலேயே உள்ளது மழையின் அளவு.
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் காணப்பட்டது. காற்று கூட இல்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டத் தொடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்களிலும் இந்த மழை பெய்தது. காலை 6.30 மணி வரையிலும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் வலுவாக இருந்த மழை போகப் போக மெதுவாக குறைந்தது.
இந்த அதிகாலை மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. மழை காரணமாக சென்னையில் வெப்பம் வெகுவாக குறைந்து போய் விட்டது. இதமான சூழல் காணப்படுகிறது.
வெப்பச் சலனமே இதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த மழை கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது மாலை, இரவு அல்லது அதிகாலையில் இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே, தென் மேற்குப் பருவ மழைக் காலம் இன்னும் முடியவில்லை. எனவே மழை பொய்த்துப் போகும் வாய்ப்பில்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில், தென்மேற்கு பருவகாற்று காலம் செப்டம்பர் மாதம் வரையிலும் இருக்கிறது. எனவே இப்பொழுது பெய்த மழை அளவை மட்டுமே கருத்தில் கொண்டு ஒட்டு மொத்தமாக மழை அளவு குறையும் என்று கூறிவிடமுடியாது.
கடந்த ஆண்டு வட கிழக்கு பருவகாற்று காலத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மழையே பெய்தது. ஆனால் கடைசி 2 வாரங்களில் பெய்த மழையால் அந்த காலத்தின் இயல்பான மழை அளவை காட்டிலும் 23 விழுக்காடு அதிகரித்துவிட்டது. எனவே தொடக்கத்தில் பெய்யும் மழையை கணக்கில் எடுத்துக்கொண்டு பருவத்தின் ஒட்டு மொத்த மழை அளவையும் கணக்கிட முடியாது என்றார்.