பேரையூர் பஞ்சாயத்து தலைவர் வெற்றி செல்லாது: ராமநாதபுரம் கோர்ட் அதிரடி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் பஞ்சாயத்து தலைவர் வெற்றி செல்லாது என ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் பஞ்சாயத்தில் கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேல்முருகன், சவுந்தரவள்ளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வேல்முருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
இந்நிலையில் அவர் சில உண்மையை மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் சவுந்தரவள்ளி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜுலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,
ஆதாயம் தரும் ஒப்பந்ததாரராக இருந்துள்ள வேல்முருகன் அதை மறைத்தும், சொத்துக்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தும் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, அவரது வெற்றி செல்லாது. அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற சவுந்தரவள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.