கர்நாடகம்: அமைச்சர் பதவி கிடைக்காத 10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு
பெங்களூர்: கர்நாடகத்தில் அமைச்சர் பதவி கிடைக்காத 10 பாஜக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகத்தின் 27வது முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள், 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.சி.பாட்டீல், கிருஷ்ணா பாளேமார், சுரேஷ் கெளடா, லட்சுமண் சவடி, பேளூர் கோபால்கிருஷ்ணா, சித்து சவடி, குமாரசாமி, அப்பு புட்டன் ஷெட்டி, ஹாலடி ஸ்ரீனிவாஸ் ஷெட்டி, சங்கண்ணா கரடி ஆகிய எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
இவர்களில் சி.சி.பாட்டீல், கிருஷ்ணா பாளேமார், லட்சுமண் சவடி ஆகியோர் சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்தவர்கள் ஆவர்.
பேளூர் கோபால்கிருஷ்ணா, சுரேஷ் கெளடா, சங்கண்ணா கரடி ஆகியோர் எதியூரப்பா ஆதரவாளர்கள். அப்பு புட்டன் ஷெட்டி, ஹாலடி ஸ்ரீனிவாஸ் ஷெட்டி ஆகியோகர் சதானந்த கெளடா ஆதரவாளர்கள் ஆவர்.
இப்போது இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் கோபமடைந்த எம்எல்ஏ குமாரசாமி விதானசெளதாவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஏற்கனவே பல்வேறு கோஷ்டிப் பூசல்கள், நில ஊழல்கள், ஆபாச விவகாரங்களால் கர்நாடகத்தில் பாஜகவின் பெயர் கெட்டுப் போயுள்ளது. 4 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் மாறிவிட்டனர்.
இந் நிலையில் புதிதாக 10 எம்எல்ஏக்கள் புதிய முதல்வருக்கு எதிராக அணி சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த அரசு அடுத்த 10 மாதங்கள் நீடிக்குமா என்பதே சந்தேகமாகியுள்ளது.