காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பெரும் தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்பு சதி: ஜிண்டால் வாக்குமூலம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக மும்பை தாக்குதலின் மூளையான அபு ஜிண்டாலின் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.
லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த அபு ஜிண்டால், செளதியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். லஷ்கர் அமைப்பை பற்றி ஏராளமான உண்மை தகவல்களை ஜிண்டால் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறான்.
காஷ்மீரிலும் மற்ற மாநிலங்களிலும் மிகப் பெரும் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டிருந்தது என்ற புதிய தகவலைக் கூறியிருக்கிறான் ஜிண்டால்.
இது பற்றி அவன் அளித்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளதாவது:
காஷ்மீரைச் சேர்ந்த லஷ்கர் கமாண்டர் ஒருவர்தான் ஜிண்டாலை அந்த அமைப்பிற்குள் கொண்டு வந்தான். அவரது பெயர் அஸ்லம் காஷ்மீரி. இன்னொரு லஷ்கர் தீவிரவாதியான ஃபயாஸ் காக்சி மூலமாக ஜிண்டாலை மகாராஷ்டிரத்தில் கடந்த 2005-ல் சந்தித்தான். இந்திய முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வு செய்து தீவிரவாதப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதை மிகச் சுலபமாக ஜிண்டாலைத் தன் வழிக்குக் கொண்டு வந்தான். மும்பை மீதான தாக்குதலுக்கு முன்பும், பின்பும் ஜிண்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியுள்ளான்.
அந்த நகரில் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான இது, புதிய தீவிரவாதக் குழுக்களை ஜம்மு காஷ்மீருக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய மரபு சாராத வழிகள் மூலமாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருக்கிறது. அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் தீவிரவாதிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் வழிபாட்டுத் தலங்களையும், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது என்பது திட்டமாகும் என்று அந்த வாக்குமூலத்தில் ஜிண்டால் கூறியிருக்கிறான்.