பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து துவக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 41அடியாக உயர்ந்ததால் நேற்று முதல் பாணதீர்த்த அருவிக்கு படகு போக்குவரத்து துவங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு பாபநாசம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கர் நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வரை ஆயிரக்கணக்கான உரை கிணறுகள் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது.
கடும் வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்ததால் கடந்த மே மாதம் 17ம் தேதி பாணதீர்த்த அருவிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சு்ற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரி்த்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 41.35 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் படகு போக்குவரத்து தொடங்க உதவி பொறியாளர் உத்தரவி்ட்டார்.
இதையடுத்து நேற்று காலை முதல் படகு போக்குவரத்து தொடங்கியது. படகில் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. மொத்தம் 20 படகுகள் உள்ளன. ஒரு படகில் செல்ல 15 நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.