ஆசிரியர் தகுத்தேர்வு விடைகள் எப்பொழுது வெளியிடப்படும்? பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
நெல்லை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகளை தேர்வாணையம் எப்பொழுது வெளியிடும் என்று தேர்வு எழுதியவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் முதன்முறையாக நேற்று முன்தினம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 6.56 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்கள் தேர்வும், பிற்பகலில் நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வும் மிகவும் கடினமாக இருந்தது. குறைந்த நேரமே ஒதுக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் ஆசிரியர்கள் பலரும் திணறினர். இதனால் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கணித பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் கணிதம் படித்தவர்கள் மட்டுமே எழுதும் நிலையில் இருந்தது. இதனால் பிற பாட பட்டதாரிகள் தேர்வு எழுத முடியாமல் திணறினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயி்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் எத்தனை பேர் 90 மதிப்பெண்கள் எடு்த்து தேர்ச்சி பெறப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது என ஆசிரியர்கள் பலரும் தெரிவி்த்தனர்.
இந்நிலையில் தகுதித் தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பெரும்பாலான கேள்விகள் அவுட் ஆப் சிலபஸில் இருந்தும், கடினமாகவும் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு எழுதியவர்கள் திகைத்து போயுள்ளனர். எனவே விடைகள் விரைவில் வெளியிடப்பட்டால்தான் தங்களது தகுதி திறனை அறிந்து கொள்ள முடியும் என ஆசிரியர்கள், பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.