குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சரத் யாதவ் அல்லது ஜஸ்வந்த்தை களம் இறக்குகிறது பாஜக
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஹமீது அன்சாரியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. அன்சாரியை எதிர்த்து சரத்யாதவ் அல்லது ஜஸ்வந்த் சிங்கை களம் இறக்குவது தொடர்பாக நாளை அறிவிக்கப்பட உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிட ஹமீது அன்சாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டவுடன் பாஜக மூத்த தலைவர்கள் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர்.
குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளமாகியவை ஆதரவு தெரிவித்தைப் போல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நடந்துவிடக் கூடாது என்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இதற்காக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான சரத் யாதவையே பேசாமல் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக்கிவிட்டால் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங்கை களம் இறக்குவது குறித்துல் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் பாஜக முடிவு செய்திருக்கிறது.