கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம்
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களின் வழிப்பாட்டிற்கு முக்கிய தொல்லையாக இருப்பது செல்போன் பேச்சு மற்றும் ரிங்டோன் ஒலி தான். தனியார் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவில்களில் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் செல்போனில் பேச எந்த தடையும் இல்லை. இதனால் வழிப்பாட்டிற்கு செல்லும் பக்தர்களின் செல்போன்கள் ஒலிக்கும் போது, பெரும் தொல்லையாக அமைந்துவிடுகிறது.
தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 10 இணை-ஆணையர் அந்தஸ்திலான கோவில்கள் உள்ளன.
மேலும் சென்னை பார்த்தசாரதி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட 10 துணை ஆணையர் அந்தஸ்திலான கோவில்கள், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உட்பட 27 உதவி ஆணையர் அந்தஸ்திலான கோவில் உட்பட மொத்தம் 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன.
எனவே தனியார் பராமரிப்பில் உள்ள கோவில்களை போன்று, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள கோவில்களில் மூலஸ்தானங்களில் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் ஜாமர் கருவி பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் பக்தர்களின் இறை வழிப்பாட்டிற்கு தொந்தரவு ஏற்படாமல் தடுக்க முடியும்.