உத்தவ் தாக்கரேவுக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி
மும்பை: சிவசேனா கட்சியின் செயல் தலைவரும், அக்கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை லீலாவதி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
இன்று காலை நெஞ்சு வலிப்பதாக உத்தவ் தாக்கரே கூறினார். இதையடுத்து அவரை உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது சிவசேனா கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
உத்தவ் தாக்கரே உடல் நலம் குறித்து மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவருக்கு என்ன பிரச்சினை என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றனர்.
கடந்த 2004ம் ஆண்டுமுதல் சிவசேனா கட்சியின் நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வருகிறார் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் தாக்கரே பார்க்க் செல்கிறார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரேவை, மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவரும், உத்தவின் உறவினருமான ராஜ் தாக்கரே நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்கவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.