அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ. அதிகாலையில் கைது
அருண் சுப்பிரமணியன் திருவள்ளூர் மணவாள நகரில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு வந்த போலீசார் அவரை திடீரென கைது செய்தனர்.
இதற்காக நள்ளிரவு 2 மணிக்கே அவரது வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 5.30மணி அளவில் அங்கு வந்த டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான டீம் எம்எல்ஏவின் வீட்டுக்குள் சென்று அவரை வேனில் அழைத்துச் சென்றது.
நேராக வெள்ளவேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நில அபகரிப்பு புகாரின் பேரில் அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் வழியில் திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான ரூ. 40 லட்சம் மதிப்பிலான 4,300 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த இடத்தை அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆக்கிரமித்து கொட்டகையும் சுற்றுச் சுவரும் அமைத்துள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட இருளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பிரபு, பொதுச் செயலாளர் குப்புராஜ் ஆகியோர் போலீசில் புகார் தந்தனர். திருவள்ளூர் நகராட்சித் தலைவர் கமாண்டோ பாஸ்கரனிடமும் இதுபற்றி புகார் தந்தனர்.
இந்தப் புகார் குறித்து திருவள்ளூர் நில மோசடி பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி எம்எல்ஏவை கைது செய்தனர்,
பின்னர் திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் உள்ள நீதிபதி கோபிநாத் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தேமுதிகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.