வேலூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது-வைகோ
இது குறித்து அவர் கூறியதாவது,
வேலூர் மாவட்டம், பாராஞ்சி பிர்க்காவிற்கு உட்பட்ட பாராஞ்சி, பரவத்தூர், நந்தி வேடந்தாங்கல், மின்னல், வேடல், மிட்டப்பேட்டை, பெருமாள்ராஜ்பேட்டை, சித்தாம்பாடி, செம்பேடு மற்றும் அக்கச்சிக்குப்பம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில், தமிழக அரசு தொழிற்பேட்டை அமைப்பதற்காக கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலங்கள் பல தலைமுறையாக அப்பகுதி மக்களின் வறுமையை நீக்கி வாழ்வு அளிக்கும் நல்ல விளைச்சல் தரும் விவசாய நிலங்கள் ஆகும். இப்பகுதியில் நெல், கரும்பு, நிலக்கடலை, பல்வேறு வகையான மலர்கள், மாந்தோப்புகள் என்று சுமார் 30 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது.
எனவே இந்த நிலங்களைக் கையகப்படுத்த கூடாது என்று இப்பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினர், அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கம் அமைத்து, கடந்த மே 22ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் முறையீட்டு மனு அனுப்பி உள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் விவசாய நிலம் கையகப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியை வன்மையாக எதிர்க்கின்றனர்.
தமிழக முதல்வரின் "தொலைநோக்குப் பார்வை 2023" திட்டத்திற்காக இந்த நிலங்கள் கையகப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் கெடுபிடி செய்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர். பல நூற்றாண்டுகளாக, தாங்கள் பயிரிட்டுப் பேணிப் பாதுகாத்து வந்த நிலம், இப்போது கைவிட்டு போய்விடுமோ என்ற ஒருவித அச்சமும், பதற்றமும் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல லட்சம் ஏக்கர் நிலம் வேளாண்மை செய்ய முடியாத நிலையில் உள்ளது. அவற்றை கண்டறிந்து தேவையான மூலக்கூறு வசதிகளை செய்து தொழிற்பேட்டைகளுக்கும், அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.
ஒருங்கிணைந்து போராடும் விவசாயிகளின் ஒருமித்த உணர்வைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமாக உள்ள பாராஞ்சி பிர்க்கா விவசாய நிலங்கள், தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தும் முயற்சிகளைக் கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அறவழியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை மதிமுக முழுமையாக ஆதரிக்கிறது என்றார்.