புதிய வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் தோப்பு வெங்கடாசலம்
சென்னை: தமிழக வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு என்.டி. வெங்கடாசலம் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் தோப்பு வெங்கடாசலம், வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசய்யா, தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு அமைச்சராகப் பதவியேற்பு செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தோப்பு வெங்கடாசலம்
பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். அவருக்கு வயது 48.
சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவராக இவர் பதவி வகித்து வருகிறார். அதிமுகவில் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் உள்ளார். பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, மாதேஸ்வரி என்ற மனைவியும், திவாகர் சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த இவர், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்துள்ளார்.
கட்சியில் தொடக்கக் காலத்தில் இருந்தே இருக்கும் இவர், தோப்புப்பாளையம் கிளைச் செயலர், பேரூர் செயலர், ஜெ. பேரவை மாவட்டத் தலைவர், அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர், கட்சியின் ஒன்றியச் செயலர் என படிப்படியாக முன்னேறியவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் புறநகர் மாவட்டச் செயலராக பொறுப்பேற்றார். சட்டப் பேரவையில் புள்ளி விவரங்களுடன் பேசுவதாலும், எதையும் துணிச்சலுடன், சாதுர்யமாகப் பேசுவதாலும் முதல்வரிடம் அடிக்கடி பாராட்டைப் பெற்று வருபவர். முதல்வரிடம் தைரியமாகவும், அன்பாகவும் பேசி தனது தொகுதிக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, உயர் கல்வி ஆராய்ச்சி மன்றம், கால்நடை பாலி கிளினிக் ஆகிய திட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.