பன்றிக்காய்ச்சல்: கோவையில் 5 வயது குழந்தைக்கு பாதிப்பு
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில், 5 வயது குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனை பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்படும் நோயாளிகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஊட்டியை அடுத்த போர்த்தியாடா கிராமத்தை சேர்ந்த காயத்ரி(24), கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அய்யப்பன்(38), அவரது மனைவி அஞ்சம்மாள்(33) மகன் தினேஷ்(5), மகள் கிருத்திகா(3) ஆகியோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து 4 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் பொது வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 பேரின் சளி மற்றும் ரத்தம் ஆகிய மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 5 வயது சிறுவனான தினேஷூக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தினேஷ், தனி வார்டிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல்:
மேலும் கோவை, திருப்பூர், அவினாசி, அன்னூர் பகுதிகளை சேர்ந்த 5 குழந்தைகள், 3 பெண்கள் என்று மொத்தம் 8 பேர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 8 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து 8 பேரும் டெங்கு காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.