340 அறை 'வீட்டிலிருந்து' 4 பெட்ரூம் வீட்டுக்கு இடம் பெயரும் பிரதீபா பாட்டீல்!
டெல்லி: 340 அறைகள் கொண்ட பிரமாண்டமான ராஷ்டிரபதி பவனிலிருந்து 4 பெட்ரூம் கொண்ட பங்களாவுக்கு இடம் பெயரவுள்ளார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரதீபா பாட்டீல்.
டெல்லியில் அவருக்காக இந்த தற்காலிக வீட்டை மத்திய பொதுப்பணித்துறை ஒதுக்கியுள்ளது. இங்கு ஒரு மாத காலத்திற்கு அவர் தங்கியிருப்பார். அதன் பின்னர் அவர் மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு சென்று செட்டிலாவார்.
ஜூலை 24ம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரதீபா பாட்டீல் இந்த வீட்டில்தான் தங்கவுள்ளார். இந்த வீடு டெல்லி துக்ளக் வீதியில் உள்ளது. இந்த பங்களாவில் தற்போது நகாசு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பச்சைப் பசேல் என புல் தரைகள், தோட்டங்களுடன் கூடிய இந்த பங்களாவுக்கு வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
பங்களாவைச் சரி செய்ய 15 நாட்களானதாம். தற்போது பங்களா கிட்டத்தட்ட முழுமையாக தயாராகி விட்டதாம். குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களை பங்களாவில் செய்துள்ளனராம். வீட்டில் ஒரு சிறிய பூஜை அறையம் ஏற்படுத்தபப்ட்டுள்ளதாம்.
பிரதீபா பாட்டீல் தங்கப் போகும் இந்த பங்களாவுக்குப் பக்கத்தில்தான் ராகுல் காந்தியின் பங்களா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புனேவில் ரெய்காட் என்ற பங்களாவில்தான் பிரதீபா பாட்டீல் செட்டிலாகவுள்ளார். இந்த வீடு தற்போது மத்திய பொதுப்பணித்துறைக்கு மாற்றப்படவுள்ளது. அதன் பின்னர் அங்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி பிரதீபாவிடம் ஒப்படைக்கவுள்ளனர். அதுவரை டெல்லியில் இந்த தற்காலிக பங்களாவில்தான் பிரதீபா பாட்டீல் தங்கியிருப்பார்.