பிரணாப் முகர்ஜிக்கு தோல்வியடைந்த பி.ஏ.சங்மா வாழ்த்து
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சங்மா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு எனது வாழ்த்துகளையும், புதிய பணியில் அவர் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை. வேட்பாளர் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.
என்னை வேட்பாளராக நிறுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாஜக தலைவர்கள், முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கும், அவர்கள் சார்ந்த அதிமுக, பிஜூ ஜனததாளம், பாஜக ஆகிய கட்சிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் பாரபட்சமே தலை தூக்கியிருந்தது. மிரட்டல்கள் உள்ளிட்டவை சரளமாக இருந்தன. எனவே மற்ற தேர்தல்களில் அமல்படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் போல குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
பிரணாப் முகர்ஜியின் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடருவீர்களா என்று கேள்விக்கு அதற்கான வாய்ப்புகளை மறுக்கவில்லை என்றார் சங்மா.