ஆடிப்பூரம் திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் வடம்பிடித்து தேரிழுத்த அமைச்சர்கள்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமானது ஆகும். இங்கு ஆடிப்பூர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு வாகனங்களில் ஆண்டாள், ரங்க மன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
விழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் இரவு ரங்க மன்னார் ஆண்டாள் திருமடியில் படுத்தபடி சயண கோலமாக காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசு உயர் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நிலையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு்ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.