தி.க. பிரமுகர் கொலை: தளி தொகுதி சிபிஐ எம்.எல்.ஏவை தேடி மைசூர் விரைந்த தனிப்படை
ஓசூர்: பெரியார் தி.க.அமைப்பாளர் பழனி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமசந்திரனை தேடி, தனிப்படை போலீசார் மைசூர் விரைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சாலைப்புரத்தில் வசித்து வந்தவர் பழனி. பெரியார் திராவிடர் கழக அமைப்பாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 5ம் தேதி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 22 பேர் மீது வழக்கு பதிவு செய்த உத்தனப்பள்ளி போலீசார், விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் உத்தனபள்ளியை சேர்ந்த கோபண்ணா(38), முரளி(28), கிருஷ்ணப்பா(29) ஆகிய 3 பேரும் வேலூர் நீதிமன்றத்திலும், கோவை நீதிமன்றத்தில் 3 பேரும் சரணடைந்தனர். மேலும் இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா, கெலமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவ மூர்த்தி உட்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தளி எம்.எல்.ஏ.வுக்கு கேரளாவில் அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த அவரது முன்னாள் உதவியாளர் ஜேம்ஸை(72), போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டாயத்தில் தலைமறைவாக இருந்த ஜேம்ஸை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தி.க.பிரமுகரை கொலை செய்த பிறகு தலைமறைவான ராமச்சந்திரன், கேரளாவில் உல்ள ஜேம்ஸின் வீட்டிற்கு சென்று அங்கு 3 நாட்கள் தங்கி உள்ளார். அப்போது ஜேம்ஸ் மூலம் செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்கிய ராமசந்திரன், பலரிடமும் பேசி உள்ளார்.
இந்த சிம்கார்டை கைப்பற்றியுள்ள போலீசார், கேரளாவில் ராமசந்திரன் தலைமறைவாக இருந்த போது, யார் யாரிடம் பேசியுள்ளார் என்று விசாரித்தனர். இதில் தேன்கனிக்கோட்டை ஏட்டு உட்பட 30 போலீசாருடன், ராமசந்திரன் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமசந்திரனுக்கு உதவும் பல போலீசாரையும், இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சுகாசினி மாற்றப்பட்டு, விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரகத்தில் இருந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 12 தனிப்படை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலீசார் அந்தந்த ஊர்களுக்கு செல்லும் போது அவர்கள் முன் கூட்டியே போலீசார் வரும் தகவலை அறிந்து வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து விடுவது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த வழக்கில் பல புதிய முறைகளை போலீசார் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று காலையில் தளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரும், கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவியின் கணவர் கலீல் உட்பட 3 பேரை போலீசார் விசாரித்தனர்.
சில தகவல்களின் அடிப்படையில் ராமசந்திரன் தற்போது, கர்நாடகா மாநிலம் மைசூரில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்ததுள்ளது. இதன்படி அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை மைசூர் விரைந்துள்ளது.