பாவம் பாஜக, வாரிசே இல்லை, அதனுடன்தான் கூட்டணி.. பாரிவேந்தர்!
சேலம்: அரசியல் வாரிசே இல்லாத ஒரே கட்சி பாஜகதான். எனவே அந்தக் கட்சியுடன்தான் அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார் பாரிவேந்தர். இவர் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் ஆவார்.
சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியின் நிறுவனராகவும் இருக்கும் பாரிவேந்தர் சேலம் வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மின் தடையை காரணம் காட்டி, அதிமுக ஆட்சிக்கு வந்தது. தற்போதும், மின் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்னையை, அதிமுகவாலும் தீர்க்க முடியாது. திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மீதும், மக்கள் வெறுப்பில் உள்ளனர். இரண்டு கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக, இந்திய ஜனநாயகக் கட்சி விளங்கும்.
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது; எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு நடக்கிறது. தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.
ஆட்சியாளர்களை அடிக்கடி மாற்றுவது, நிர்வாகச் சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. திராவிட கட்சிகளோடும், வாரிசு அரசியல் நடத்தும் காங்கிரசுடனும், கூட்டு சேர மாட்டோம். அரசியல் வாரிசு இல்லாத, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அடுத்த பொதுத் தேர்தலை சந்திப்போம் என்றார் பாரிவேந்தர்.