டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை: பழ. நெடுமாறன்
நாகை: திமுக தலைவர் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்பது அவருக்கே தெரியும் என்று தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்து உள்ள ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் அரங்கில் தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் அறிமுக விழா நடந்தது.
அதில் கலந்து கொண்ட நெடுமாறன் பேசியதாவது,
தமிழ் இனம் பல இடங்களில் கொத்தடிமைகளாக்கப்படும் நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் இந்த இனத்தவர் நம் தமிழகத்தை தான் நம்பி இருக்கிறார்கள். தமிழ் இளைஞர்கள் விழி்ப்பு பெற இந்நூல் கருவியாக இருக்கும்.
ஈழத் தமிழர்களுக்காக டெசோ மாநாடு நடத்தப் போகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி வீரமுழக்கமிட்டார். ஆனால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வந்து அவரை சந்தித்துவிட்டு சென்ற பிறகு சுருதி குறைந்து இப்போதைக்கு தனி ஈழக் கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்றார். இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர் துடிக்கிறார்.
கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்பது அவருக்கே தெரியும். ஆனால் இதன் மூலம் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகள் கனிமொழியை காப்பாற்றிவிடலாம் என்று அவர் நினைக்கிறார் என்றார்.