போதை விருந்து: ஐபிஎல் வீரர் ராகுல் சர்மா, நடிகை ஷில்பா போதையில் இருந்தது உறுதி
கடந்த மே மாதம் 20ம் தேதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள ஓக்லேண்ட் பிரீமியர் ஹோட்டலில் போதை விருந்து நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சென்று போதையில் இருந்த 90 பேரைப் பிடித்தனர். அந்த விருந்தில் கலந்து கொண்ட ஐபிஎல் வீரர்கள் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெய்ன் பார்னெல் மற்றும் ராகுல் சர்மா ஆகியோரும் சிக்கினர்.
தாங்கள் விருந்தில் கலந்து கொண்டது உண்மை தான் ஆனால் போதையில் இல்லை என்று அவர்கள் இருவரும் தெரிவித்தனர். இதேபோன்று அந்த விருந்தில் சிக்கிய டிவி நடிகை ஷில்பா அக்னிஹோத்ரியும் தான் போதைப் பொருள் உட்கொள்ளவேயில்லை என்று சாதித்தார். இதற்கிடையே அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முதலில் 46 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதையடுத்து கடந்த 21ம் தேதி மீதமுள்ள 44 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. பரிசோதனை அறிக்கையின்படி ஷில்பா உள்பட 86 பேர் போதையில் இருந்தது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் வீரர்கள் வெய்ன் பார்னெல், ராகுல் சர்மா, ஷில்பாவின் கணவர் அபூர்வா அக்னிஹோத்ரி, அன்ஷுமன் ஜா, பிரபல பேஷன் டிசைனர் ராக்கி, கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கத் பேடி, பிரபலங்கள் ராகுல் தாகியா, கார்த்திக் ஜோபன்புத்ரா, ஹோட்டல் டைரக்டர் விஷய் ஹன்டா ஆகியோர் போதைப் பொருள் உட்கொண்டதாக போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
அந்த விருந்தில் கலந்து கொண்ட 90 பேரில் 86 பேர் போதையில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஐபிஎல் வீரர்கள் இருவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது மகன் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றும் பரிசோதனை அறிக்கை மாறியுள்ளது என்றும் ராகுலின் தந்தை பிரதீப் தெரிவித்துள்ளார்.