ஒருவழியாக மின் தடை நேரத்தை கொஞ்சம் குறைச்சுட்டோம்: தமிழக மின்துறை அமைச்சர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டின் ஒரு நாளில் அதிகபட்ச மின் பயனீட்டளவாக 248 மில்லியன் யூனிட் என்ற அளவை 24.07.2012 அன்றும் அதிகபட்ச மின் தேவையாக 11283 மெகாவாட்டை 26.06.2012 அன்றும் எட்டியுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் உற்பத்தியை அதிகப்படுத்தியும், மே மாதம் முதல் கிடைக்கும் காற்றாலை மின் உற்பத்தியை முழுவதும் பயன்படுத்தியும் மின் பயனீட்டாளர்களுக்கு இயன்ற அளவிற்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் அனைத்து புனல் மின் நிலையங்களுக்கான நீர் தேக்கங்களில் தண்ணீர் முற்றிலும் இல்லாததாலும், நிலையற்ற காற்றாலை மின் உற்பத்தின் காரணமாகவும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத பழுதின் காரணமாகவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தங்களாலும், தற்போதைய மின் நிலைமையை சமாளிப்பது பெரும் சவாலாகவே உள்ளது.
கடந்த ஐந்து தினங்களாக காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாகவும் மின்தடை நேரம் குறைக்கப்பட்டது. சில நாட்களில் முழுவதுமாக மின்தடை ஏதுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதி நீங்கலாக ஏனைய விவசாய மின் பயனீட்டாளர்களுக்கும் இயன்ற அளவிற்கு கூடுதல் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இம்மாநில அரசு, நடைமுறையிலுள்ள புதிய மின்திட்டங்களான வடசென்னை, வள்ளூர் கூட்டு முயற்சி அனல் மின் திட்டம் மற்றும் மேட்டூர் நிலை-3 ஆகிய மின் திட்டங்கள் மின் உற்பத்தியை தொடங்கும் போது தமிழகத்தின் மின் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.