இமாச்சல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழு தலைவர் பதவியில் இருந்து மாஜி முதல்வர் விலகல்!
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் வீர்பத்ரா சிங், இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் வீர்பத்ரா சிங். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவராக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது பதவியில் இருந்து அவர் திடீரென நேற்று ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரிந்தர் சிங்கிற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், இன்று சிம்லாவில் நடைபெற உள்ள மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழுவின் கூட்டத்தில் வீர்பத்ரா சிங் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வீர்பத்ரா சிங்கிற்கு நெருங்கிய சிலர் கூறியதாவது,
வீர்பத்ரா சிங்கிடம் தகுந்த முறையில் ஆலோசிக்காமல், தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரும் வகையில், வீர்பத்ரா சிங்கிற்கு ஆதரவாக, கட்சி பிரச்சார குழு அமைக்கப்படவில்லை. இதனால் தேர்தலில் தோல்வியை சந்தித்து மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாக அவர் விரும்பவில்லை என்றனர்.
இந்த நிலையில் வீர்பத்ரா சிங்கின் ராஜினாமாவை தடுத்து நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது,
வீர்பத்ரா சிங் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி ஒரு யுகமே. தேர்தல் நெருங்கியுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், கட்சியின் மூத்த தலைவரான அவர், இது போன்ற முடிவுகளை எடுக்கமாட்டார் என்றார்.