சர்ச்சைக்குரிய மோடியின் பேட்டியை எடுத்த சித்திக் எங்கள் கட்சி இல்லை: சமாஜ்வாதி கட்சி
பாட்னா: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை உருது மொழி பத்திரிகைக்காக பேட்டி எடுத்த ஷகித் சித்திக் தமது கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
உருது மொழி ஏடான நய் துனியாவுக்கு மோடி அளித்த பேட்டியில், குஜராத் வன்முறைகளில் தமக்குத் தொடர்பிருப்பதாக நிரூபித்தால் தூக்கிலிடுங்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேட்டியை எடுத்த ஷ்கித் சித்திக், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இதை மறுத்துள்ள சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், அவர் நீண்டாகாலத்துக்கு முன்பாகவே சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவைக்குப் போட்டியிட்டார். பின்னர் ராஷ்டிரிய லோக் தள கட்சிக்கு சென்றுவிட்டார் என்றார். மேலும் சித்திக்கை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் குறிப்பிடுவது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.