நரிக்குறவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்-சிவகாமி
உத்திரமேரூர்: நரிக்குறவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமூக சமத்துவப்படை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நரிக்குறவர் சமூகம் சார்பில் உள்ஒதுக்கீடு கோரி உத்திரமேரூரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமூகச் சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் சிவகாமி கலந்து கொண்டு பேசியதாவது,
நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவர்கள் வன விலங்குகளை வேட்டையாட அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர்கள் பாசி, மணி, போன்றவற்றை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் தொழில் துவங்க அரசு உதவ வேண்டும்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை, உரம் போன்றவற்றை வழங்குவது போல், நரிக்குறவர்களுக்குப் பாசி, மணி போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும். நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில், அரசு உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியை துவக்க வேண்டும்.
அரசு இப்பணியை மேற்கொள்ளாவிட்டால், சமூகச் சமத்துவப்படை சார்பில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் உண்டு உறைவிடப் பள்ளி துவக்கப்படும். நரிக்குறவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை, சமூகச் சமத்துவப்படை நரிக்குறவர்களுக்காக போராடும் என்றார்.