பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அணை கட்ட வைகோ கடும் எதிர்ப்பு!
சென்னை: தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மாநில அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சென்ன கேசவ மலைத் தொகுப்பு நந்தி துர்கம் பாலாற்றின் நதி மூலம் ஆகும். அம் மாநிலத்தில் 90 கி.மீ. தூரம் ஓடி ஆந்திர மாநிலத்தின் வழியாக 45 கி.மீ. கடந்து தமிழகத்தில் 225 கி.மீ. தூரம் பாய்ந்தோடி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கல்பக்கம் அடுத்த வாயலூர் வழியாக சென்று வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான நிலப்பரப்பின் பாசனமும், ஒன்றரை கோடி மக்களின் குடிநீரும் தென்னக ரயில் பயணிகளுக்கும், கால்நடைகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு நீர் தான்.
1892ம் ஆண்டு நீர் பங்கீட்டில் கர்நாடக மாநிலத்திற்கு 25 சதவிகிதமும், ஆந்திர மாநிலத்திற்கு 15 சதவிகிதமும், தமிழகத்திற்கு 60 சதவீதமும், பாலாற்று நீரை பங்கீட்டு கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை முழுப் பங்கீட்டு நீரை ஒரு முறை கூட நாம் பெற்றதில்லை.
காரணம் தலைமடை மாநிலங்கள், கடைமடை மாநிலத்தின் ஒப்புதல் பெறாமலேயே பாலாற்று நீர் வரத்தை தடுத்து நிறுத்தி, பல தடுப்பணைகளையும், அணைக் கட்டுகளையும் கட்டி ஒப்புக் கொண்ட ஒப்பந்தங்களை மீறி தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர். 3 அண்டை மாநிலங்களாலும், மத்திய அரசாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு பாலைவன நிலமாக மாறி, உணவு உற்பத்தியில் 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
ஆந்திர மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் சாந்திபுரம் மண்மலம், சிவராமபுரத்தில் பாலாற்றின் குறுக்கே 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.60 கோடியில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, முதல் தவணையாக ரூ.35 கோடி சித்தர் நீர்வளத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அணை கட்ட ஒப்பந்த புள்ளி கோரப் போவதாகவும், தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் அணை கட்டும் இடத்தை பார்வையிட அழைக்கப்பட்டுள்ளனர். இது மத்திய மாநில காங்கிரஸ் அரசுகளின் பச்சை துரோகம். எனவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு கடைமடை மாநிலமான தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட தடை விதிக்க வேண்டும்.
ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு விரைந்து எடுத்திட வேண்டும். அதற்குத் தமிழக மக்களும், அனைத்து ஜனநாயக அமைப்புகளும் துணை நிற்க வேண்டும்.
தமிழக அரசு பாலாற்றை செயற்கைக்கோல் நில அளவு செய்து, இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லை வரையறை செய்து, கானிக்கல் அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி, மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதுடன், வரையரை செய்து அனுமதிக்கப்பட்ட அளவான 3 அடிக்கு மேல் மணல் அள்ளப்படுவதை மாநில அரசு கண்காணித்து தடுத்து நிறுத்தி, பாலாற்றை பாதுகாத்திட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.