பாஸ்போர்ட் மோசடியின் சர்வதேச தலைமையிடமாக உருவெடுத்திருக்கும் பாக்.: இங்கிலாந்து தூதர்
இஸ்லாமாபாத்: பாஸ்போர்ட் மோசடித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பாகிஸ்தான் தான் இந்த மோசடியில் சர்வதேச தலைமையிடமாக இருக்கிறது அந்நாட்டுக்கான இங்கிலாந்து தூதர் ஆதம் தாம்சன் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பிரஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
போலி பாஸ்போர்ட், விசா மோசடி தொழிலில் பாகிஸ்தான் சர்வதேச தலைமையிடமாக இருக்கிறது. கடந்த ஆண்டு மண்டும் போலி ஆவணங்கள் மூலம் இங்கிலாந்து செல்ல முயற்சித்து பிடிபட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரம். இந்த நாட்டு மக்கள்தான் விசா மோசடியில் சர்வதேச கில்லாடிகளாக இருக்கின்றனர். பாஸ்போர்ட் மோசடி இங்கு தொழிலாக கொடி கட்டிப் பறக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக போலி பாஸ்போர்ட் மூலம் இதுவரை எவரும் இங்கிலாந்துக்குள் நுழைந்திருப்பதாக கண்டுபிடிக்கவில்லை. ஏனெனில் ஒலிம்பிக் போட்டியிக்காக செல்வோரின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறை பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.