முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ் பாடத்தில் 2 வினாக்களின் விடை எங்கே?
சேலம்: அண்மையில் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ்ப்பாடப் பிரிவின் முடிவுகள் குழப்பமாக உள்ளதாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 27ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடந்தது. பாடவாரியாக நடத்தப்பட்ட தேர்வில் 150 வினாக்களுக்கு தேர்வர்கள் விடையளித்தனர். இந்த தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27ம் தேதி வெளியிட்டது. அதில் தமிழ் பாடப்பிரிவில் இரண்டு வினாக்களுக்கு மதிப்பெண் வழஙகாமல் விடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் குழப்பமாக இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர் கூறுகையில்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழ்ப் பாடப்பிரிவின் விடைத்தாளில் 98 மற்றும் 119 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு மட்டும் விடையை தெரிவிக்காமல் ஸ்டார் குறியீடு போட்டுள்ளனர். அந்த 2 கேள்விகளுக்கும் மதிப்பெண் வழங்காமல் உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே தேர்வில் 107 மதிப்பெண்கள் பெற்றவர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர்.
இந்த தேர்வில் நான் 106 மதிப்பெண்கள் வாங்கியுள்ளேன். அந்த 2 கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கினால் என்னைப் போன்று ஒரு மதிப்பெண்ணில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்கும். அதனால் தேர்வு வாரியம் அந்த 2 கேள்விகளுக்கான மதிப்பெண்களை உடனே வெளியிட வேண்டும் என்றார்.