சிறப்பு தணிக்கை: சென்னையில் 102 பள்ளி, கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து
சென்னை: சென்னையில் 2ம் வகுப்பு மாணவி, பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார். இதையடுத்து சென்னையில் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கை சோதனையில் முறையான ஆவணங்கள், பாதுகாப்பு வசதிகள் இல்லாத 102 பள்ளி மற்றும் வாகனங்களின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து பலியானார். இதையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் இதுவரை நடைபெற்ற சிறப்பு தணிக்கை குறித்து சென்னை போக்குவரத்து இணை ஆணையர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். இதில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு சரக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்ட சோதனை பற்றி அவரிடம் தெரிவித்தனர்.
இதில் சென்னையில் மொத்தம் உள்ள 5120 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் 3829 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் தகுந்த பாதுகாப்பு வசதிகள், முறையான ஆவணங்கள் ஆகியவை இல்லாத 102 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் மேற்கண்ட வாகனங்களில் சுட்டி காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, வட்டார \போக்குவரத்து அலுவலகத்தில் சரி பார்த்த பின்னர் வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மீதமுள்ள 1291 வாகனங்கள் வரும் 3 நாட்களில் ஆய்வு செய்து முடிக்குமாறு, இணை ஆணையர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். தமிழகத்தில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா, ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களின் மீது தவிர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.