தமிழக மீனவர்கள் மீது உமாபாரதிக்கு திடீர் அக்கறை ஏன்?
இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்தேன். நாடு வளம் பெற, பெண்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பிரார்த்தனை செய்தேன். ராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்க வேண்டும். ராமேஸ்வரத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள அரசும், மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ராமர் சேது பாலத்தை அழித்து சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 2 லட்சம் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவது கண்டனத்திற்குரியது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒரு உயிரைக் காக்கக்கூட பெரும் முயற்சி மேற்கொள்வார்கள். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லையே.
அண்டை நாடுகளுடன் உறவாக இருக்க வேண்டும் தான். ஆனால் இருநாடுகளும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் அல்லவா. சட்டம், ஒப்பந்தத்தை மீறும் நாடுகளுக்கு வெறும் எச்சரிக்கை போதாது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.