பிரபாகரன் படத்திற்கு தடையா.. அப்ப ராஜிவ், சோனியா படங்களுக்கு...-சீமான் கேள்வி
சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் படங்களை விற்க தமிழகத்தில் தடை செய்யப்படுகிறது. இந்த தடை நீடித்தால் காங்கிரஸ் தலைவர்களான ராஜிவ் காந்தி, சோனியா ஆகியோரின் படங்களை அகற்றுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் படங்கள் விற்க தடை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஈழத்தில் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாக துடைக்க, தம்மை தாமே அழித்து கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப்புலிகள்.
அவர்கள் மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக பலியானவர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன். அவரது படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது. இது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக தமிழக மக்களின் ஆதரவை முழுமையாக திரட்டுவோம்.
இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை நிறுத்த முடியாது. அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கவும் முடியாது. நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை கொண்டு வருகிறோம். எங்களை சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த உதவியின் மூலம் எங்களின் விடுதலைப போராட்டம் அழிக்கப்பட்டது. தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது. இப்போது கூட கூறுகிறோம், உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், சிங்கள படைகளை நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவை பாருங்கள்.
தமிழர்களுக்கு என்று ஒரு நாடு நிச்சயம் உருவாகும். இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, படித்தவர்கள் அரசியலிற்கு வர வேண்டும். ஏழை, எளிய மக்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குகளை விற்கின்றனர்.
இது அவர்களின் குற்றமல்ல, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் அவர்களை வைத்துள்ள இன்றைய அரசியலின் சூழ்ச்சி அது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி, இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வர வேண்டும்.
ஒரு லட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம். ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.