2ஜி வழக்கு: இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆ.ராசாவிடமே இருந்தது
2ஜி ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது ஓய்வு பெற்ற தொலைத்தொடர்புத் துறை துணை டைரக்டர் ஜெனரல் ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்தார். அப்போது அவரிடம் வழக்கறிஞர் காட்டிய சில ஆவணங்களில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் எழுத்தையும், கையெழுத்தையும் அடையாளம் காட்டினார்.
அவர் தனது சாட்சியத்தில் கூறியிருப்பதாவது,
நான் சில காலம் வேறு துறையில் பணியாற்றி விட்டு 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி மீண்டும் தொலைத்தொடர்பு துறைக்கு வந்தேன். அப்போது சாதாரண மற்றும் செல்போன் சேவை நிறுவனங்கள் யுனிபைட் ஆக்சஸ் சர்வீஸ்' முறைக்கு மாறியுள்ளதைக் கண்டேன். அந்த சேவையை கேட்டுத்தான் நிறைய விண்ணப்பங்கள் வந்திருந்தன. 13-4-2007 அன்று அவற்றுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையைக் கேட்டு அது நிலுவையில் இருந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தொலைத்தொடர்பு ஆணையம் தனது முடிவை தெரிவிக்கும். அதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும். அமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன் அது அரசு கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படும். அந்த வகையில் கொள்கை மாற்றம் குறித்த அனைத்து இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஆ.ராசாவுக்கு தான் இருந்தது என்றார்.