திருவண்ணாமலையில் 23 போலி டாக்டர்கள் கைது: போலீஸ் அதிரடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முறையாகப் படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்த 23 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பலர் முறையான படிப்பின்றி அலோபதி முறையில் சிகிச்சை அளி்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேட்டவலம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்த வசந்தகுமார்(35), ஆரணி அருகேயுள்ள முள்ளண்டிரம் கிராமத்தைச் சேர்ந்த தாசன் மகன் வில்லியம்ஸ் (46), மடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் மணிவாசகம் (24),போளூர் அருகேயுள்ள ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கனின் மகன் செல்வராஜ் (35), சேத்துபட்டு அண்ணா தெருவைச் சேர்ந்த நடராஜனின் மகன் உத்தண்டி (38), நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தனபாலின் மகன் தங்கராஜ் (42), காத்தவராயனின் மகன் கணேசன் (59), தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடேசனின் மகன் ராமசாமி (49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கீழ்பென்னாத்தூரில் ஏழுமலை (45), அமலசாமி (66), ஜமுனாமரத்தூரில் சந்திரசேகர் (27), திருநாவுக்கரசு (52), தண்டராம்பட்டு அடுத்த விஜயப்பனூரில் சீனிவாசன்(25), செங்கம் அடுத்த மேல்குழுதியூரில் சங்கர் (38), செங்கம் அடுத்த பரமணந்தல் கிராமத்தில் ரகோரி (38), சாத்தனூரில் ராஜசேகர் (37), கணேசன் (65), புதுப்பாளையத்தில் துரை ஜெயராமன் (66), தூசியை அடுத்த மேனலூரில் அன்பழகன் (32) உள்ளிட்ட 23 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் வில்லியம்ஸ் மற்றும் மணிவாசகம் ஆகியோர் சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். செல்வராஜ் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். உத்தண்டி, ராமசாமி ஆகியோர் பிளஸ் டூவும், தங்கராஜ் பட்டப்படிப்பும் படித்துள்ளனர். கணேசன் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.