கல்லூரி கேம்பஸ்களில் வேலைக்கு ஆள் எடுப்பதை குறைக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள்!
வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஐடி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவை நடத்தும். இந்த ஆண்டு கேம்பஸ்களில் பணியாளர்களை தேர்வு செய்வதை நிறுவனங்கள் குறைக்க திட்டமிட்டுள்ளன.
நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ இந்த ஆண்டு தனது 90 சதவீத பணியாளர்களை கல்லூரிகளில் நேர்காணல் நடத்தி தேர்வு செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதை இப்போது 70 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துவிட்டது.
அதே போல கடந்த 2011ம் ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் பணியில் சேர தேர்வு செய்த 25,000 பேர் பணியில் சேரும் தேதியை இன்போசிஸ் தள்ளிப் போட்டுவிட்டது.
சர்வதேச அளவிலான பொருளாதார சிக்கல்கள் காரணமாக புராஜெக்ட்டுகள் கிடைப்பதில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன சாப்ட்வேர் நிறுவனங்கள். இதனால், வேலைக்கு ஆள் சேர்ப்பதையும் குறைக்க ஆரம்பித்துள்ளன.
தங்களுக்குத் தேவையானபோது ஆட்களை பணிக்கு எடுக்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால் கேம்பஸ்களில் நேர்காணல் நடத்தி ஊழியர்களை தேர்வு செய்வதை இந்த நிறுவனங்கள் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டில் சாப்ட்வேர் மற்றும் பிபிஓ துறையின் வளர்ச்சி 11 முதல் 14 சதவீதத்துக்குள்ளேயே இருக்கும் என நாஸ்காம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தத் துறையின் வளர்ச்சி 16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டபடி 50,000 பேரை கேம்பஸ்களிலேயே எடுக்க முடிவு செய்துள்ளது. அதே போல எச்சிஎல் நிறுவனமும் திட்டமிட்டபடி கேம்பஸ்கள் மூலம் 70 சதவீதம் பேரையும் நேரடியாக 30 சதவீதம் பேரையும் பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.