ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்
டெல்லி: பாஜக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங், வரும் 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோர உள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு ஹமீது அன்சாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார்.
இவருக்குக் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பிக்களின் ஆதரவை பெற பாஜக தீவிரமாக உள்ளது.
முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.ஏ. சங்மாவுக்கு, பாஜக ஆதரவு தந்தது. ஆனாலும் அவர் மண்ணைக் கவ்வினார்.
இந் நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில், தங்களது வேட்பாளருக்கு அதிமுக, பிஜூ ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில், தனக்கு ஆதரவு கோரி முதல்வர் ஜெயலலிதாவை ஆகஸ்ட் 6ம் தேதி ஜஸ்வந்த் சிங் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது கொடநாட்டில் உள்ள ஜெயலலிதா 6ம் தேதிக்கு முன் சென்னை திரும்பி விடுவாரா அல்லது ஜஸ்வந்த் சிங்கை கொடநாட்டில் வைத்து சந்திப்பாரா என்பது தெரியவில்லை.
7ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.